செய்திகள்
முத்தம்மாள் காலனியில் மழைநீர் தேங்கி இருந்த போது எடுத்த படம்.

தூத்துக்குடியில் வடியாத மழைநீரால் நோய் பரவும் அபாயம்

Published On 2021-01-31 10:01 GMT   |   Update On 2021-01-31 10:01 GMT
தூத்துக்குடியில் வடியாத மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. எனவே கூடுதல் மோட்டார்களை வைத்து தண்ணீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து 10 நாட்கள் கனமழை பெய்தது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளான முத்தம்மாள் காலனி, தனசேகரன் நகர், ராம்நகர், குறிஞ்சி நகர், ரகுமத் நகா் உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளதால் அங்கு வசித்த பொதுமக்கள் மற்ற இடங்களுக்கு சென்று வாடகை வீட்டில் தங்கியுள்ளனர்.

தற்போது மழை முடிவடைந்து 10 நாட்களை கடந்தும் மாநகர பகுதிகளில் வெள்ளம் வடியாமல் உள்ளது. மாநகராட்சி சார்பில் மோட்டார்கள் வைத்து தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. குறைந்த அளவு மோட்டார்கள் வைத்து நீரினை வெளியேற்றும் பணி நடப்பதால் நீரினை வெளியேற்ற தாமதமாகிறது. இந்த பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் பச்சை நிறமாக மாறிவருகிறது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த மழைநீரில் சிறுவர்கள், பொதுமக்கள் என பலர் ரப்பர் டியூப் மூலம் தங்களது வீடுகளுக்கு செல்கிறார்கள். எனவே மாநகராட்சி சார்பில் கூடுதல் மோட்டார்களை வைத்து நீரினை விரைவில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News