செய்திகள்
கஞ்சா விற்ற ரவுடிகள் உள்பட 7 பேர் கைது
கஞ்சா விற்ற ரவுடிகள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
சென்னை விருகம்பாக்கம் சுடுகாடு மற்றும் நெற்குன்றத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில் கோயம்பேடு போலீசார் தனிப்படைகள் அமைத்து மாறுவேடத்தில் அந்த பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது விருகம்பாக்கம் சுடுகாடு அருகே ஒரு கும்பல் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற அவர்களை போலீசார் விரட்டிச்சென்று 7 பேரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.
அதில் அவர்கள், விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடிகளான ஆனந்து என்ற கோழிபாபு (வயது 22), நாகராஜ் (22), மதன் (22), பிரவின் (21) மற்றும் அவர்களது கூட்டாளிகளான பாலாஜி (21), கார்த்திக் என்ற மாடு கார்த்திக் (24), சுஜீவன் (34) என்பதும், இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்ததும் தெரிந்தது. 7 பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் மீது ஏற்கனவே அடிதடி மற்றும் கொலை வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.