செய்திகள்
கூடங்குளம் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
கூடங்குளம் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கூடங்குளம்:
கூடங்குளம் அருகே ஸ்ரீரங்க நாராயணபுரம் கிராமத்தில் சாலை வழியாக கனரக வாகனங்கள் அளவுக்கு அதிகமான கற்கள், ஜல்லிகள் ஏற்றி செல்வதன் மூலமாக ரோடு குண்டும் குழியுமாக பழுதடைந்து உள்ளது. வாகனத்தில் ஏற்றிச் செல்லும் கற்கள் சாலைகளில் விழுந்து கிடக்கிறது. எனவே கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுமதிக்கவும் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அந்த பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 20-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த ராதாபுரம் தாசில்தார், கூடங்குளம் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.