செய்திகள்
நாமக்கல்லில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்:
தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு உதவியாக இருக்கும் வகையில் இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. ஆனால் 2017-18-ம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மடிக்கணினி வழங்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது கொரோனா தொற்றில் நாடு சிக்கி இருக்கும் நிலையில் அரசு இணைய வழி கற்றலை மேற்கொள்ள வழிகாட்டியது.
அதேபோல் பள்ளி, கல்லூரிகளும் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகிறது. எனவே மடிக்கணினி வழங்காத மாணவர்களுக்கு வழங்கக்கோரி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்த்தி, தங்கராஜ், கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இலவச மடிக்கணினி வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.