சேலம் இரும்பாலையில் சந்தன மரத்தை வெட்ட முயன்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் இரும்பாலையில் சந்தன மரத்தை வெட்ட முயன்றவர் கைது
பதிவு: ஜனவரி 19, 2021 18:27
கைது
சூரமங்கலம்:
சேலம் இரும்பாலையில் சந்தன மரங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 3 பேர் தடுப்புச் சுவரை தாண்டி உள்ளே குதித்து சந்தன மரங்களை
வெட்ட முயன்றனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படை போலீசார் அங்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். அவர் தப்பிக்க முயன்றபோது, சுற்றுச்சுவரில் இருந்த கம்பியில் கால் சிக்கி படுகாயம் அடைந்தார். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட
விசாரணையில், பிடிபட்டவர் அந்தியூரை சேர்ந்த முருகேசன் (வயது 50) என்பது தெரியவந்தது. பிடிபட்ட அவரை மத்திய பாதுகாப்பு படை போலீசார் இரும்பாலை
போலீசாரிடம் ஒப்படைத்தனர். இரும்பாலை போலீசார் முருகேசனை கைது செய்ததுடன், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு இருந்ததால், அவரை சேலம் அரசு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.