செய்திகள்
வாணியம்பாடி அருகே பாறையில் தவறி விழுந்த கல்லூரி மாணவன் பலி
வாணியம்பாடி அருகே பாறையில் தவறி விழுந்த கல்லூரி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்தவர் அஜய் (வயது 22), தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் வாணியம்பாடி அருகே கொத்தக்கோட்டை கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். பின்னர் அப்பகுதியில் உள்ள நெக்னாமலை தண்ணிபாறை முருகன் கோவில் பகுதிக்கு அஜய் மற்றும் உறவினர் சந்தோஷ் (13) இருவரும் சென்றனர். அப்போது அஜய் அங்குள்ள பாறையில் நிலை தடுமாறி விழுந்தார். இதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு அங்கிருந்த தண்ணீரில் மூழ்கி பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.