திண்டுக்கல் அருகே குதிரைகளுக்கு பொங்கல் விழா நடத்தி கொண்டாடிய மக்கள்
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே குதிரைகளுக்கு பொங்கல்விழா நடத்தி கிராம மக்கள் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகையின் 2-ம் நாள் மாட்டுபொங்கல் உற்சாகமாக பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை போக்குவரத்து வசதி இல்லாத கிராமமாகும். இங்கு வாழை, மா, பலா, எலுமிச்சை மற்றும் காய்கறிகள் விவசாயம் செய்யப்படுகிறது.
மலை கிராமங்களில் எந்தவித வாகனங்களும் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு வருவதற்கு குதிரைகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல அவசரதேவைகளுக்கும், மருத்துவஉதவி சமயத்திலும் குதிரைகளை முக்கிய போக்குவரத்துக்கு உதவியாக உள்ளது.
எனவே குதிரைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் நாளில் இப்பகுதி மக்கள் குதிரைபொங்கல் வைத்து கொண்டாடினர். குதிரைகளை குளிப்பாட்டி மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்து பொங்கல் வைத்து அவற்றுக்கு வழங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அழைத்துவந்தனர். வருடம் முழுவதும் தங்கள் வாழ்க்கைக்கு உதவி செய்யும் குதிரைகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இந்த விழாவை ஆண்டுதோறும் கொண்டாடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.