செய்திகள்
கோவில்பட்டி அருகே நின்ற லாரி மீது லோடு ஆட்டோ மோதல்- 2 பேர் பலி
கோவில்பட்டி அருகே நின்ற லாரி மீது லோடு ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவில்பட்டி:
நெல்லையை அடுத்த மேலத்திடியூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 35). இவர் கோவையில் லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தன்னுடைய குடும்பத்தினர், உறவினர்களுடன் லோடு ஆட்டோவில் சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தார். அந்த ஆட்டோவை உறவினரான பாஸ்கர் (37) ஓட்டி வந்தார்.
சம்பவத்தன்று காலையில் கோவில்பட்டி அருகே இடைசெவல் விலக்கு பகுதியில் சென்றபோது, அங்கு சாலையோரம் நின்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் பாஸ்கர் மனைவி சுமத்ரா (34), கோபாலகிருஷ்ணன் மகள் யாசிகா (8) ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கோபாலகிருஷ்ணன், அவருடைய மனைவி விஜயா, மகன் பிரனேஷ், பாஸ்கர், அவருடைய மகன் ராஜ்குமார் உள்ளிட்ட 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.