ராமநாதபுரத்தில் பறவை காய்ச்சல் பரவுமா? பொது மக்கள் அச்சம்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன் உள்ளிட்டவை லாரிகளில் ஏற்றிக் கொண்டு நாள் தோறும் கேரளாவிற்கு செல்லப்படுகிறது.
மேலும் கேரளாவில் இருந்து ஏராளமானோர் ஏர்வாடி தர்காவிற்கு வேண்டுதலுக்காக வந்து செல்கின்றனர்.
பலர் சுற்றுலா பயணிகளாக வருகின்றனர். இவர்களுக்கு எவ்வித பரிசோதனையும் செய்வது கிடையாது.
ஏற்கனவே பன்றி காய்ச்சல் பீதியில் இருந்த ராமநாதபுரம் மாவட்ட மக்கள் தற்போது பறவை காய்ச்சல் பீதியில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு வாய்ப்புகள் குறைவு. கேரளத்தில் இருந்து நேரடியாக எந்தப் பொருளும் வரவில்லை.
கோழி மற்றும் முட்டை, பழங்கள் உள்ளிட்ட வைகளை கேரளத்தில் இருந்து ஏற்றிவரும் வாகனங்கள் தமிழக எல்லைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன என்று சுகாதார தரப்பில் தெரிவித்த நிலையிலும் பக்தர்களால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
எனவே ஏர்வாடியில் சிறப்பு பரிசோதனை மையம் ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதே போல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜப்பான் காடை, நாட்டுக் கோழி வளர்ப்பு பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறையினர் தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், கோழிகள், காடைகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கால் நடைதுறை மருத்துவர்கள் தெரிவித்தனர்.