செய்திகள்
மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு
மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சேஷா வெங்கட், மாவட்ட பிரதிநிதி அக்ராவரம் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்து புறப்பட்ட துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஆற்காடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கூறிய ஆலோசனையை அடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.