செய்திகள்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஒரே ஜீப்பில் நின்றபடி தொண்டர்களை பார்த்து வணக்கம் தெரிவித்தனர்

ஒரே காரில் பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்- தொண்டர்கள் உற்சாகம்

Published On 2021-01-05 09:49 GMT   |   Update On 2021-01-05 09:49 GMT
தூத்துக்குடியில் இருந்து சேரன்மாதேவி கோவிந்தபேரிக்கு ஒரே காரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பயணம் செய்தனர். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
தூத்துக்குடி:

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி கோவிந்தபேரியில் மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் மற்றும் உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே விமானத்தில் வந்தனர். அவர்களுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் அவர்கள் ஒரே காரில் கோவிந்தபேரிக்கு புறப்பட்டனர். அதாவது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஏறிச்சென்றார். இதை பார்த்த அங்கிருந்த தொண்டர்கள் உற்சாக மிகுதியால் ஆரவாரம் செய்தனர்.

தொடர்ந்து நெல்லை மாவட்ட எல்லையான மேலப்பாளையம் கருங்குளம் பகுதியில் வந்தபோது அவர்களுக்கு செண்டை மேளம் முழங்க அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காரில் இருந்து இறங்கி திறந்த ஜீப்பில் ஏறினார்கள். இருபுறமும் கூடி இருந்த பொதுமக்கள், தொண்டர்களை பார்த்து கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தனர். இரட்டை விரலை காண்பித்து உற்சாகப்படுத்தினர். பின்னர் அவர்கள் காரில் கோவிந்தபேரிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக கருங்குளத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இருதலைவர்களும் ஒன்றாக வாகனங்களில் பயணம் செய்த சம்பவம் தொண்டர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News