செய்திகள்
தீ விபத்தில் காயம் அடைந்த மோட்டார்மெக்கானிக் பலி
கடையம் அருகே தீ விபத்தில் காயம் அடைந்த மோட்டார் மெக்கானிக் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டி, வலையக்காரன் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ் (வயது 29). இவர் அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒர்க் ஷாப் வைத்திருந்தார். இவர் புத்தாண்டு தினத்தன்று காலை ஒர்க் ஷாப்பில் பூஜை செய்வதற்கு சூடன் கொளுத்தி விட்டு தீக்குச்சியை அணைக்காமல் அப்படியே போட்டுள்ளார்.
இதனால் அருகில் கிடந்த பழைய பொருட்கள் மற்றும் மோட்டார் கழிவு எண்ணெய் உள்ளிட்டவை தீப்பிடித்துள்ளது. இதில் சுரேஷ் மீது தீப்பற்றியது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.