செய்திகள்
ஆற்காடு அருகே 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 2 பேர் கைது
ஆற்காடு அருகே கட்டிட வேலைக்கு சென்ற 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. 10-ம் வகுப்பு முடித்துவிட்டு கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது இவரை சக்கரமல்லூர் சின்னம்மா பேட்டை பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் சதீஷ் (21) என்பவர் காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா, ஆதமங்கலம் புதூர் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஏழுமலை (46) என்பவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கர்ப்பமான சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வாசுகி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சதீஷ், ஏழுமலை ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.