செய்திகள்
கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த தண்ணீர் குளம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் சந்தோஷ் (வயது 12). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று மாலை சந்தோஷ் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றான். அப்போது சந்தோஷ் திடீரென நீரில் மூழ்கியதில் அடித்துச் செல்லப்பட்டான். இதை கண்ட கரையிலிருந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நீரில் குதித்து கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சந்தோசை மீட்டனர்.
பின்னர் உடனடியாக சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணா கால்வாயில் குளிக்கும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.