செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

விவசாயிகளை பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Published On 2020-12-26 07:48 GMT   |   Update On 2020-12-26 07:48 GMT
புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

பெரம்பலூர்:

பெரம்பலூரில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் நேற்றிரவு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்றது. தமிழகத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் பிரதமர் மோடி தமிழக மக்களை புறக்கணிக்கிறார். தமிழகத்திற்கு நிதி உதவி கேட்டால் கொடுக்கவில்லை. கஜா புயல் நிவாரணம் வழங்க ரூ.15 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.1,500 கோடி தான் மத்திய அரசு நிதி ஒதுக்கியது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை 32 விவசாயிகள் இறந்துள்ளனர். விவசாயிகளை பற்றி மத்திய அரசு கவலை கொள்ள வில்லை. கார்ப்பரேட் கம்பெனிக்காக செயல்படுகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது உறவினருக்கு சாலை போட ஒப்பந்தம் அளித்துள்ளார். இதன் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளார். வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு இறந்ததும் 3 நாட்களாக அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. ரூ. 800 கோடி கொடுத்தால் தான் ஒப்படைக்கப்படும் என்றனர். ஒரு அமைச்சரே அவ்வளவு கோடி வைத்துள்ளார் என்றால் அ.தி.மு.க. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் எவ்வளவு கோடி ஊழல் செய்திருப்பார்கள் என நினைத்து பாருங்கள்.

மத்திய அரசுவலுக்கட்டாயமாக நீட் தேர்வினை அமல்படுத்தியுள்ளது. இதனால் கிராமப்புற மாணவ, மாணவிகள் மருத்துவ கல்வி படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு இந்தியா முழுவதும் தடை. ஆனால் தமிழகத்தில் மட்டும் போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டது. அதே போல் தி.மு.க. ஆட்சி வந்ததும் சட்டப்போராட்டம் நடத்தி நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

மேலும் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களான அரசு மருத்துவக்கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் வழியாக ரெயில் போக்குவரத்து வசதி போன்றவை கொண்டு வரப்படும். ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். ஆட்சி மாற்றத்தை கொண்டு வர மக்கள் முடிவெடுத்துவிட்டனர். இதனால் ஆட்சி மாறுவது உறுதி. வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதியிலும் திமுக வெற்றிபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி., மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் பிரபாகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News