செய்திகள்
திருச்சியில் 3 அழகிகளை வைத்து விபசார தொழில் செய்த பெண் கைது
திருச்சியில் உள்ள தங்கும் விடுதியில் போலீசார் விபசார வேட்டை நடத்தினார்கள். மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
திருச்சி:
திருச்சி மாநகரில் ஸ்பா என்ற பெயரில் நடத்தப்படும் சில மாசாஜ் சென்டர்களிலும் விபசாரம் நடத்துவது கடந்த சில வாரங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க வீடுகளை வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட சிலர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மசாஜ் சென்டர்களை போலீசார் கண்காணித்ததை தொடர்ந்து தற்போது ஓட்டல்களில் உள்ள தங்கும் விடுதிக்கு விபசார தொழிலை அவர்கள் மாற்ற தொடங்கி உள்ளனர்.
இந்தநிலையில் திருச்சி பாலக்கரை வாய்க்கால் மேட்டு தெருவில் உள்ள நடராஜ் தங்கும் விடுதியில் (லாட்ஜ்) விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவின்படி மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நாஞ்சில் குமார் தலைமையில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு ஒரு அறையில் 3 அழகிகளை வைத்து ஒரு பெண் விபசாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 அழகிகளையும் விபசாரத்தில் ஈடுபடுத்திய கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த ராதாவை (வயது 50) போலீசார் கைது செய்தனர்.
பின்னர், அங்கிருந்த 3 அழகிகளை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட ராதாவிடம் இருந்து, ஒரு செல்போன் மற்றும் கருத்தடை சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.