செய்திகள்
திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை (கோப்பு படம்)

விவசாயிகளுக்கு ஆதரவாக 18ம் தேதி திமுக-கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதம்

Published On 2020-12-14 08:18 GMT   |   Update On 2020-12-14 08:18 GMT
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 18ம் தேதி திமுக, கூட்டணி கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

டெல்லியில் போராடி வரும் விவசாயிளுக்கு ஆதரவாக, தமிழக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் போராடி வரும் விவசாயிகளுக்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் உணர்வு பூர்வமாக தொடர்ந்து ஆதரித்து கூட்டாகவும்-தனியாகவும்  போராட்டங்களை நடத்தி  வந்தாலும், இதுவரை மத்திய பா.ஜ.க. அரசு “குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாத” சட்டங்களையும், “இலவச மின்சாரத்தை ரத்து செய்ய” கொண்டு வரப்படும் மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற முன்வரவில்லை.  

போராட்டத்தைக் கையாளும் மத்திய பா.ஜ.க. அரசினையும் - அதை ஒரு வார்த்தை கூட தட்டிக் கேட்காத முதலமைச்சர் பழனிச்சாமியையும் கண்டித்தும்,

டெல்லியில் கொரோனா காலத்திலும் உயிரைத் தியாக வேள்வியாக முன்னிறுத்தி, அறவழியில் போராடி வரும் விவசாயிகளுக்கும் - அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தும் - 18.12.2020 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 வரை அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்  பங்கேற்கும் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்”  நடைபெறும்.

ஜனநாயக நெறிகளைப் பின்பற்றி, அறவழியில் விவசாயப் பெருமக்களுக்கு, தொடர்ந்து ஆதரவளிப்போம்! அவர்களின் கோரிக்கைகள் வெற்றி பெற எந்நாளும் துணை நிற்போம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News