செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-12-06 07:49 GMT   |   Update On 2020-12-06 07:52 GMT
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக இன்று மற்றும் நாளை ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த இரு தினங்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இன்று மற்றும் நாளை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு- மாலத்தீவு, கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம் (சென்டிமீட்டரில்) :- முத்துப்பேட்டை (திருவாரூர்) 10, மகாபலிபுரம் (செங்கல்பட்டு) 7, குடவாசல், நன்னிலம், தலைஞாயிறு-6, திருத்துறைப்பூண்டி, செய்யூர், கொள்ளிடம், சோழவரம், திருப்பூண்டி, சிதம்பரம்-5.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News