செய்திகள்
திண்டிவனம் வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் நகை திருட்டு
திண்டிவனத்தில் இரவு நேரத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் 4 பவுன் நகை மற்றும் செல்போனை மர்ம நபர் திருடிச் சென்றார்.
திண்டிவனம்:
திண்டிவனம் மரக்காணம் ரோடு நாகலாபுரம் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 40). இவர் தனது வீட்டின் மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கீழ்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கதவை பூட்டாமல் குடும்பத்தினருடன் படுத்து தூங்கினார். இதை நோட்டமிட்ட மர்மநபர் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கு பூஜை அறையில் இருந்த 4 பவுன் நகை மற்றும் செல்போனை திருடினார். அப்போது சத்தம் கேட்டு எழுந்து பார்த்த தட்சணாமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் அந்த மர்மநபரை பிடிக்க முயன்றார். இருப்பினும் மர்மநபர் அவரிடம் சிக்காமல் நகை, செல்போனுடன் அங்கிருந்து தப்பிச்சென்றார். அவருக்கு துணையாக வந்த மற்றொரு மர்மநபரும் தப்பிச்சென்றார். இது குறித்த தகவலின் பேரில் திண்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். திருடு போன நகை மற்றும் செல்போனின் மொத்த மதிப்பு 1½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.