செய்திகள்
கோப்புப்படம்

குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி - நேர்த்திக்கடன் செய்வதற்காக வந்த இடத்தில் பரிதாபம்

Published On 2020-12-02 22:23 GMT   |   Update On 2020-12-02 22:23 GMT
வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் உறவினர் குழந்தைகளுக்கு மொட்டையடித்து நேர்த்தி கடன்செலுத்த வந்த இடத்தில் ஆட்டோ டிரைவர் கோவில் குளத்தில் மூழ்கி பலியானார்.
அணைக்கட்டு:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கோனாமேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகன் அருண் (வயது 30). பட்டதாரியான இவர் ஆட்டோ ஓட்டிவந்தார். இவருக்கு மேனகா என்ற மனைவியும், வினிஷா, லிவிஷா என்ற 2 மகள்களும் உள்ளனர். அருணின் மைத்துனர் மகள்களுக்கு மொட்டையடித்து நேத்திக்கடன் செய்வதற்காக குடும்பத்துடன் நேற்று காலை வாணியம்பாடியில் இருந்து ஆட்டோவில் வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலுக்கு வந்தார்.

கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, குழந்தைகளுக்கு மொட்டை அடித்துக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் அருண் குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் டைவ் அடித்து குளத்தில் குதித்துள்ளார். அப்போது குளத்தில் இருந்த படிக்கட்டில் தலை அடிபட்டது. இதில் மயங்கிய அவர் தண்ணீருக்குள் மூழ்கினர்.

வெகுநேரமாகியும் அருண் வராததால் மனைவி மற்றும் உறவினர்கள் குளத்தின் அருகே சென்று பார்த்தனர். அப்போது அவர் குளித்துக்கொண்டிருந்த பகுதியில் தண்ணீர் ரத்தமாக காட்சியளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே இது குறித்து கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து குடியாத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் அரை மணி நேரம் போராடி குளத்தில் மூழ்கிய அருணை பிணமாக மீட்டனர்.

பள்ளிகொண்டா போலீசார், அருண் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது மனைவி மேனகா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். கோவிலுக்கு வந்த இடத்தில் ஆட்டோ டிரைவர் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News