செய்திகள்
ராசிபுரம் சிறுமிகள் பலாத்கார வழக்கு- 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ராசிபுரம் அருகே சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நாமக்கல்:
ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் அருகே பள்ளி மாணவிகளான 2 சிறுமிகள் 6 மாதங்களாக பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டதாக கடந்த மாதம் புகார் எழுந்தது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் கடந்த மாதம் 12-ந் தேதி விசாரணை மேற்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, 75 வயது முதியவர் உள்பட 11 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில் சிறுமிகள் பலாத்கார வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் உள்ள தனியார் டயர் தயாரிப்பு நிறுவன ஊழியர் செந்தமிழ்ச்செல்வம் (வயது 31), வரதராஜ் (55) ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டு உள்ளார்.
இதையடுத்து அதற்கான உத்தரவு நகலை ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திரா சேலம் மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கினார்.