செய்திகள்
மேலூர் அருகே குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் பலி
மேலூர் அருகே குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
மேலூர் அருகே உள்ள தேவன்பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 60). இவர் பஞ்சாயத்து மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கு மின்மோட்டார் இயக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஆறுமுகம் மது குடித்து விட்டு அருகில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அவர் குடிபோதையில் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக கீழவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.