செய்திகள்
விபத்து

திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- தந்தை-மகன் பலி

Published On 2020-11-16 11:58 GMT   |   Update On 2020-11-16 11:58 GMT
திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் தந்தை- மகன் பரிதாபமாக இறந்தனர்.
திருமங்கலம்:

திருமங்கலம் சிந்துபட்டி அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 30). இவரது 3 வயது மகன் நிஷாந்த்க்கு உடல்நிலை சரியில்லை. இதனால் முத்துக்குமார் தனது மகன் நிஷாந்தை அழைத்துக்கொண்டு வாகைக்குளத்தில் இருந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். முத்துக்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்ட நிஷாந்த் முன்னால் அமர்ந்து இருந்தார்.

இந்த மோட்டார் சைக்கிள் கட்டதேவன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது வகுரணியை சேர்ந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தனர். இவர்கள் திடீரென தனியார் பஸ்சை முந்த முயன்றபோது முத்துக்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதினர்.

இதில் கீழே விழுந்து முத்துக்குமார், நிஷாந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி 2 பேரும் இறந்தனர். மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News