செய்திகள்
கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- தொழிலாளி பலி
கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள நக்கலமுத்தன்பட்டியை அடுத்த பாறைப்பட்டி கிழக்குத்தெரு காலனியை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகன் சிவகுமார் (வயது 23). கூலி தொழிலாளி. இவர் தனது மனைவி லட்சுமியுடன் (23) நேற்று மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். இளையரசனேந்தல் அய்யனார் கோவில் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார் திடீரென நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து உருண்டு, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சிவகுமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் லட்சுமி, கார் டிரைவர் பி.ரெட்டியாபட்டி நடுத்தெருவைச் சேர்ந்த சுந்தர் மகேஷ் (31) ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் லட்சுமி மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்தில் பலியான சிவகுமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.