செய்திகள்
பள்ளியில் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்த பெற்றோர்

பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு- கருத்துகள் அரசிடம் சமர்ப்பிப்பு

Published On 2020-11-11 04:34 GMT   |   Update On 2020-11-11 04:34 GMT
பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோரின் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பின்னர் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிகளில், மாணவ- மாணவிகள் சேர்க்கை நடத்தப்பட்டது. அதேநேரம் பள்ளிகள் திறக்காத நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

ஆனால் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் விரும்பிய உயர்கல்வியை பெறுவதற்கு, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது அவசியம். எனவே 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 16-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்கு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பெற்றோரின் கருத்துகளை கேட்கும்படி அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அரசு பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரை அழைத்து கருத்து கேட்கப்பட்டது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை கூறியிருப்பதாவது:

பள்ளிகளை திறப்பதற்கு பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 50 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோரின் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசே இறுதி முடிவு எடுக்கும்.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News