செய்திகள்
டீக்கடை வைக்க அனுமதி வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது
கோவையில் மத்திய அரசு அலுவலகத்தில் டீக்கடை வைக்க அனுமதி வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை ராம்நகரில் உள்ள லஜபதிராய் வீதியை சேர்ந்தவர் ரசீத்(வயது 40). இவருக்கும், மதுரை தானப்ப முதலியார் வீதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் செல்வராஜ்(55) என்பவருக்கும் இடைய கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அப்போது ரசீத் தான் சொந்தமாக டீக்கடை வைக்க உள்ளதாக பிரான்சிஸ் சேவியர் செல்வராஜிடம் கூறினார். உடனே தனக்கு கோவை - அவினாசி ரோட்டில் நவ இந்தியா அருகில் உள்ள மத்திய அரசு அலுவலகமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தெரிந்தவர்கள் உள்ளதாகவும், அவர்களிடம் பேசி அந்த அலுவலகத்தில் டீக்கடை வைக்க அனுமதி வாங்கி தருகிறேன் என்றும் பிரான்சிஸ் சேவியர் செல்வராஜ் கூறினார். மேலும் அதற்கு ரூ.5 லட்சம் முன்தொகையாக தர வேண்டும் என்று கேட்டார். இதை உண்மை என நம்பிய ரசீத், கடந்த மே மாதம் 4-ந் தேதி பிரான்சிஸ் சேவியர் செல்வராஜை சந்தித்து ரூ.5 லட்சத்தை கொடுத்தார்.
பணத்தை வாங்கிக்கொண்ட அவர், ரசீத்திடம் டீக்கடை அமைப்பதற்கான ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்து, விரைவில் அனுமதிக்கான அழைப்பு வரும் என்று கூறினார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் கடை அமைக்க எந்த அழைப்பும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், பிரான்சிஸ் சேவியர் செல்வராஜிடம் கேட்டார். ஆனால் அவர் அதற்கு சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் டீக்கடை வைக்க அனுமதி தேவையில்லை, என்னிடம் வாங்கிய பணத்தை தாருங்கள் என்று கேட்டார். அதற்கும் முறையாக பதில் அளிக்காமல் பிரான்சிஸ் சேவியர் செல்வராஜ் தட்டிக்கழித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் ரூ.5 லட்சத்தை பெற்று அவர் மோசடி செய்ததை அறிந்த ரசீத், கோவை காட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரான்சிஸ் சேவியர் செல்வராஜை கைது செய்தனர்.