செய்திகள்
சேலம் கிச்சிப்பாளையத்தில் சூதாடிய 15 பேர் கைது - ரூ.2 லட்சம் பறிமுதல்
சேலம் கிச்சிப்பாளையத்தில் சூதாடிய 15 பேர் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் பறிமுதல் செய்தனர்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் பேச்சியம்மன் நகரை சேர்ந்தவர் வினோத் (வயது 27). இவருடைய வீட்டில் பணம் வைத்து சூதாடுவதாக கிச்சிப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது அந்த வீட்டில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சூதாட்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வினோத், மோகன், அருண்குமார், சந்தோஷ்குமார், தர்மன், ராஜேஷ்கண்ணா, மதன்குமார் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 21 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில், கைதானவர்கள் தனது இருசக்கர வாகனங்களை அந்த வீட்டின் முன்பு நிறுத்தாமல் ஆங்காங்கே நிறுத்திவிட்டு உறவினர்கள் போல் வந்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.