செய்திகள்
தாராபுரத்தில் பருவ மழையால் சாலையோரம் கொட்டப்படும் தக்காளி
தாராபுரம் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் தக்காளி செடியில் இருந்த பழங்கள் அழுகின. இதனை பறித்த விவசாயிகள் சாலை ஓரங்களில் கொட்டி வருகின்றனர்.
தாராபுரம்:
தாராபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளான அலங்கியம், கோவிந்தாபுரம், கொளத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது தக்காளி செடியில் காய்கள் அதிகமாக உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாராபுரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தக்காளி செடியில் இருந்த பழங்கள் அழுகின. அழுகிய பழங்களை செடிகளில் இருந்து பறித்த விவசாயிகள் அதனை சாலை ஓரங்களிலும், காடுகளிலும் கொட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தாராபுரம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் பாதிப்பு அதிகமாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் தாராபுரம் பகுதியில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் அழுகல் நோய் காரணமாக வரத்து குறைந்ததால் தற்போது மார்க்கெட்டில் கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி விலை உயரவும் வாய்ப்பு உள்ளது என அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.