செய்திகள்
பாளையங்கோட்டை அருகே கொட்டும் மழையில் பொதுமக்கள் சாலை மறியல்
பாளையங்கோட்டை அருகே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள பர்கிட்மாநகரத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் பிரச்சினை உள்ளது. மேலும் பஞ்சாயத்து மூலம் வழங்கப்படுகின்ற தண்ணீர் 10 நாட்களுக்கு மேலாக வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பர்கிட்மாநகர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் நேற்று காலையில் காலிக்குடங்களுடன் அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், சிலர் குடை பிடித்தபடியும், சிலர் மழையில் நனைந்து கொண்டும் நின்று போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும், பாளையங்கோட்டை யூனியன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.