செய்திகள்
நடராஜன்- போலி வைர நகை.

போலி வைரம் கொடுத்து முதியவரிடம் ரூ.2½ லட்சம் நகை அபேஸ்- 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு

Published On 2020-11-06 23:57 GMT   |   Update On 2020-11-06 23:57 GMT
திண்டிவனத்தில் போலி வைரம் கொடுத்து முதியவரிடம் ரூ.2½ லட்சம் நகையை அபேஸ் செய்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டிவனம்:

சென்னை அடையாறு இந்திராநகரை சேர்ந்தவர் நடராஜன்(வயது 78). இவர் நேற்று முன்தினம் திண்டிவனம் அருகே நொளம்பூர் கிராமத்தில் உள்ள உறவினர்களை பார்க்க வந்திருந்தார். பின்னர் இரவில் சென்னைக்கு செல்வதற்காக திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது 25வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், நடராஜனிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். அப்போது அவர்கள், தங்களிடம் ரூ.40 லட்சம் மதிப்புள்ள வைர நகை இருப்பதாகவும், அதை தற்போது விற்க முடியவில்லை எனவும், தங்களிடம் உள்ள நகையை கொடுத்தால் இந்த வைர நகையை தருவதாகவும் கூறி கற்கள் பதித்த நகையை காண்பித்தனர்.

அதை பார்த்ததும் சபலம் அடைந்த நடராஜன், தான் அணிந்திருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 7 பவுன் நகையை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட வாலிபர்கள், தங்களிடம் இருந்த கற்கள் பதித்த நகையை கொடுத்து விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர்.

பின்னர் அதை பார்த்தபோதுதான், அது வைரநகை இல்லை என்பதும், போலியானது என்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன், திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News