செய்திகள்
கைது

ரூ.22 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்- 4 பேர் கைது

Published On 2020-11-06 06:48 GMT   |   Update On 2020-11-06 06:48 GMT
மங்கலம் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.22 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மங்கலம்:

திருப்பூர் மங்கலத்தை அடுத்த பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட வலையபாளையம் -வண்ணாங்காடு பகுதியில் சின்னச்சாமி (வயது 40) என்பவருக்குச் சொந்தமான குடோன் உள்ளது. இங்கு குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நீளாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் அய்யாசாமி மற்றும் போலீசார் விரைந்தனர். பின்னர் வலையபாளையம் பகுதியில் உள்ள அந்த குடோனில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஏராளமான மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

அத்துடன் அங்கு ஒரு அறையில் தங்கி இருந்த பல்லடம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தராஜ் (24), வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த வைகுண்டராமன் (38), திருப்பூர் பொல்லிகாளிபாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (35), கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த சாஜிபிரசாத் (43) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.22 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய சரக்குவாகனம், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக வலையபாளையம் பகுதியைச் சேர்ந்த குடோன் உரிமையாளர் சின்னச்சாமியை மங்கலம் போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News