செய்திகள்
நாகர்கோவிலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை
நாகர்கோவிலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
அகஸ்தீஸ்வரம் புவியூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 36). இவர் நாகர்கோவில் கோர்ட்டு ரோடு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு ஓட்டலுக்கு கார்த்திக் காரில் வந்தார்.
அப்போது ஓட்டலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ரூ.3 லட்சத்தை ஒரு பையில் எடுத்து வந்தார். அதை தனது காரில் வைத்து விட்டு ஓட்டலுக்குள் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் காரில் ரூ.3 லட்சத்துடன் வைத்திருந்த பையையும் காணவில்லை. மர்மநபர்கள் யாரோ கார் கண்ணாடியை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுபற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அந்த பகுதி ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும்.
எனவே கார்த்திக் பணம் எடுத்து வந்ததை மர்மநபர்கள் நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.