செய்திகள்
மேலப்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
மேலப்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் பி.எஸ்.என்.எல் 2-வது தெருவை சேர்ந்தவர் பாதுஷா. தொழிலாளி. இவரது மகன் அப்துல் வாஹித் (வயது 11). இவன் அந்த பகுதி உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று அந்த பகுதியில் விளையாட சென்றான்.
வீட்டுக்கு அருகே ஒரு கிணறு உள்ளது. அந்த கிணற்றில் ஒரு பக்கம் சுவர் இல்லாமல் இருந்தது. அந்த கிணறு அருகே அப்துல் வாஹித் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அவன் கால்தவறி கிணற்றில் விழுந்தான். அவன் உயிருக்கு போராடி தத்தளித்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த பகுதியை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள், அந்த சிறுவனை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் சிறுவன் உடல் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.