செய்திகள்
முற்றுகை

சேலம் கலெக்டர் அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை

Published On 2020-11-01 06:09 GMT   |   Update On 2020-11-01 06:09 GMT
சேலத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டனர்.
சேலம்:

சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் அண்ணா சிலை அருகே ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இங்கு உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கும், அருகே உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கும் பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து உடையாப்பட்டி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகன் என்பவர் நேற்று முன்தினம் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அப்போது, அங்கு பணியில் இருந்த போலீசார் ஆட்டோ டிரைவர் ஜெகனை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஆட்டோ டிரைவர் ஜெகன் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், ஆட்டோ டிரைவர் ஜெகனை தரக்குறைவாக பேசி அவரை தற்கொலைக்கு தூண்டும் வகையில் நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக ஆட்டோ டிரைவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர், அவர்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கலெக்டர் ராமனிடம் வழங்கினர். இந்த சம்பவத்தால் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News