செய்திகள்
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி- பொதுமக்கள் சாலை மறியல்
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம் டோல்கேட்:
லால்குடி அருகே உள்ள கொப்பாவளி கிராமத்தை சேர்ந்தவர் சப்பாணி. இவரது மகன் ஆபாவாணன் (வயது 32). இவர் தற்போது உத்தமர்சீலி கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டில் தனது குடும்பத்தினருடன் தங்கி திருவானைக்கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிள்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் உத்தமர்சீலிக்கு ஆபாவாணன் சென்று கொண்டிருந்தபோது பனையபுரம் அருகே திருச்சி-கல்லணை சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் டிப்பரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உத்தமர்சீலி கிராம மக்கள், சாலையோரம் டிராக்டரை நிறுத்தி வைத்திருந்த உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இருள் சூழ்ந்த சாலைகளில் மின்விளக்கு அமைக்க ஆவண செய்ய வேண்டும் எனக்கூறி திருச்சி-கல்லணை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், கொள்ளிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதைதொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார், டிராக்டர் டிப்பர் உரிமையாளர் பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகாந்தன் (40) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.