செய்திகள்
தஞ்சை வெண்ணாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 4 பேர் கைது
தஞ்சை வெண்ணாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கிழக்கு போலீஸ் நிலைய போலீசார் தாமரை பன்னாட்டு மேல்நிலைப்பள்ளி அருகே ரோந்து பணி மேற்கொண்டபோது அந்த வழியாக மணல் அள்ளி வந்த 4 மாட்டு வண்டிகளை வழி மறித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர்கள், புது தெரு கொடிக்காலூர் பகுதியை சேர்ந்த மோகன் மகன் மணிமாறன் (வயது 19 ), செல்வராஜ் மகன் பெலிக்ஸ்ராஜ் (28), மணி மகன் சதிஷ் (21), மணிகண்டன் (19) ஆகியோர் என்பதும், இவர்கள் வெண்ணாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிமாறன், பெலிக்ஸ்ராஜ், சதிஷ், மணிகண்டன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.