செய்திகள்
பழனியில் கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 60). விவசாயி. இவர் நேற்று காலை உறவினர் வீட்டு திருமணத்துக்காக பழனி வந்தார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பழனி வடக்கு ரதவீதியில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக சின்னச்சாமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சின்னச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.