செய்திகள்
திருவட்டார் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
திருவட்டார் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே உள்ள ஆதிதிராவிடர் காலனி, இட்டகவேலி செருப்பாலூரை சேர்ந்தவர் அப்போஸ்தலர் (வயது 65), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை திருவட்டாரில் இருந்து குலசேகரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புத்தன் கடை பகுதியில் சென்ற போது முன்னால் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அப்போஸ்தலர் லாரியை முந்தி செல்ல முயன்றார்.
இதில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் லாரியின் முன் சக்கரத்தில் மோதியது. இதில் நிலை தடுமாறிய அப்போஸ்தலர் கீழே விழுந்து லாரியின் பின் சக்கரத்தில் சிக்கினார்.
இதில் சக்கரம் அவர் மீது ஏறியதால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி சக்கரத்தில் சிக்கி பலியான அப்போஸ்தலருக்கு மனைவி மற்றும் மகனும், மகளும் உள்ளனர்.