செய்திகள்
திருப்பரங்குன்றம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பரங்குன்றம் அருகே நடுரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கடந்த ஒரு வாரமாக வீணாக வெளியேறி வருகிறது. இதனை சரி செய்த கோரி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் பாலசுப்பிரமணிநகர் அருகே நடுரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கடந்த ஒரு வாரமாக வீணாக வெளியேறி வருகிறது. அதை சரி செய்ய வேண்டும் என்று மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதை அதிகாரிகள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து அதிகரிப்பதால் உடைந்த இடத்தில் நாளுக்கு நாள் பள்ளம் உருவாகி வருவதோடு குடி தண்ணீர் வீணாகும் நிலை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலையும் உருவாகக்கூடும். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையாக சேதமடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.