செய்திகள்
கரூர் காமராஜ் மார்க்கெட்டில் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 ¼ லட்சம் கொள்ளை
கரூர் காமராஜ் மார்க்கெட்டில் கடையின் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்:
கரூர் வடக்கு காந்திகிராமத்திற்கு உட்பட்ட இ.பி. காலனி அன்புநகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 45). இவர் கரூர் காமராஜ் மார்க்கெட்டில் ஸ்டேசனரி பொருட்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 16-ந்தேதி அன்று இரவு, வழக்கம் போல் வியாபாரத்தை முடித்தார். பின்னர் கடையை வழக்கம்போல் பூட்டி விட்டு நாகராஜன் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து கடந்த 17-ந்தேதி காலை கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் கடைக்குள் சென்று பாார்த்தார். அப்போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நாகராஜன் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்குப்பதிவு செய்து, கடையில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றார். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவங்கள் ஏதேனும் பதிவாகி உள்ளதா எனவும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கடைகள் நிறைந்த காமராஜ் மார்க்கெட் பகுதியில் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.