செய்திகள்
கோப்புபடம்

குன்னம் அருகே மூதாட்டி கழுத்தை அறுத்து நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்- வாலிபர் கைது

Published On 2020-10-10 09:26 GMT   |   Update On 2020-10-10 09:26 GMT
குன்னம் அருகே மூதாட்டி கழுத்தை அறுத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்ததாக பெண் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கல்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மனைவி மல்லிகா(வயது 60). பொன்னுசாமி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள வீட்டில் மல்லிகா தனியாக வசித்து வருகிறார். இவருடைய மகன் ராஜா, அந்த கிராமத்தில் வடக்குத் தெருவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மல்லிகாவின் வீட்டிற்குள் ஒரு பெண்ணும், ஒரு வாலிபரும் நுழைந்து, அவருடைய கழுத்தை கத்தியால் அறுத்து, நகை மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். இது குறித்து ராஜா, மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் அங்கு வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய், வீட்டை மோப்பம் பிடித்தபடி சென்று, அருகில் உள்ள கார்த்திக் என்பவர் வீட்டில் படுத்துக்கொண்டது. இதனால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். மேலும் பாடாலூர் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணுசாமி, சண்முகம், ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.

நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண்ணும், வாலிபரும் சாலையில் நடந்து சென்றனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணான பதில் கூறியதால், 2 பேரிடமும் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையின்போது இருவரும் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது;-

மல்லிகா வீட்டின் அருகே திருச்சி மாவட்டம் சமயபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த லட்சுமணனின் மகன் கார்த்திக்(25), அதே பகுதியை சேர்ந்த பெருமாளின் மனைவி சாந்தி(35) ஆகியோர் கல்பாடி கிராமத்தில் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மல்லிகா, கார்த்திக் மற்றும் சாந்தியை அவ்வப்போது உதவிக்கு அழைப்பது வழக்கம். அப்போது இருவரும் மூதாட்டி வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் பணத்தை நோட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மல்லிகாவின் வீட்டிற்குள் கார்த்திக், சாந்தி ஆகியோர் அத்துமீறி நுழைந்து மல்லிகாவின் கழுத்தில் துண்டை போட்டு நெறித்துள்ளனர். அவர் திமிறிக்கொண்டு ஓடி குளியலறையில் ஒளிந்து கொண்டார். அங்கு சென்ற கார்த்திக், அவர் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்துள்ளார். மல்லிகா ரத்த வெள்ளத்தில் சரிந்தவுடன் 7 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர். வறுமையின் காரணமாக மல்லிகாவின் கழுத்தை அறுத்து நகை, பணத்தை கொள்ளையடித்ததாக அவர்கள் கூறினர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News