செய்திகள்
கோப்பு படம்.

திருக்கோவிலூர் அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை

Published On 2020-09-27 08:54 GMT   |   Update On 2020-09-27 08:54 GMT
திருக்கோவிலூர் அருகே வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள பரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி தீபா(வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றது. குபேந்திரகுமார்(11) என்ற மகனும், வர்ஷினி(7) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் வரதட்சணை தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் ராதாகிருஷ்ணன், அவரது தம்பிகள் பரமசிவம், திருவேங்கடம், மாமியார் அஞ்சலை ஆகியோர் சேர்ந்து தீபாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் வீட்டில் இருந்த தீபா அவரது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதில் தீ வெப்பம் தாங்க முடியாமல் அவர் அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடிச்சென்று தீபாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக முகையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி தீபா பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து தீபாவின் அண்ணன் தணிக்கலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை கொடுத்த புகாரின்பேரில் அரகண்டநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் வழக்குபதிவு செய்தார். மேலும் வரதட்சணை கொடுமை காரணமாக தீபா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரனை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News