செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கோயம்பேடு மார்க்கெட் 28ந் தேதி திறப்பு- கடை உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-09-25 02:44 GMT   |   Update On 2020-09-25 02:44 GMT
கோயம்பேடு மார்க்கெட் 28-ந் தேதி திறக்க உள்ள நிலையில், கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மே 5-ந் தேதி மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் வருகிற 28-ந்தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் உள்ள விவரம் வருமாறு:-

* கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக கடைகள் திறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே, கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

* மார்க்கெட்டுக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் மருத்துவதுறையினரால் உடல் வெப்ப சோதனை மற்றும் தேவைப்படும் இதர பரிசோதனைகள் செய்த பின்னரே மார்க்கெட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

* மார்க்கெட்டுக்குள் மூன்று சக்கர பயணிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வது முற்றிலும் தடை செய்யப்படும்.

* தனிநபர் (பொதுமக்கள்) கொள்முதல் மற்றும் சில்லரை வணிகம் முற்றிலும் தடைசெய்யப்படும்.

* மொத்த காய்கறி விற்பனை அங்காடிக்கு வரும் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும். காய்கறி வாங்க வரும் வாடிக்கையாளர்களின் (சில்லரை வியாபாரிகளின்) வாகனங்கள் அதிகாலை முதல் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படும். காய்கறி மார்க்கெட்டில் உள்ள நுழைவுவாயில்கள் காலை 9 மணி அளவில் மூடப்படும்.

* ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட விவரங்கள் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News