செய்திகள்
கொலை செய்யப்பட்ட அருள் ஸ்டாலின்

வடமதுரை அருகே இரும்பு கம்பியால் அடித்து தொழிலாளி படுகொலை- அண்ணன் கைது

Published On 2020-09-24 10:24 GMT   |   Update On 2020-09-24 10:24 GMT
வடமதுரை அருகே இரும்பு கம்பியால் அடித்து தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். அவர் விபத்தில் இறந்ததாக கூறி நாடகமாடிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மோளப்பாடியூரை சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மகன்கள் ஜான்பீட்டர் (வயது 38), அருள்ஸ்டாலின் (30). இருவரும் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். அருள்ஸ்டாலினுக்கு மரியபுஷ்பம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஜான்பீட்டருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து அதே பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள்ஸ்டாலினுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து மரியபுஷ்பம் கணவரை பிரிந்து மகள்களுடன் அதே பகுதியில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த அருள்ஸ்டாலின் அண்ணன் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற போது தவறி விழுந்து அருள்ஸ்டாலின் படுகாயமடைந்ததாக கூறி அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜான்பீட்டர் சேர்த்தார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அருள்ஸ்டாலின் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து நடந்த பிரேத பரிசோதனையில் பயங்கர ஆயுதத்தால் அவர் தாக்கப்பட்டிருந்ததும், அதனால் ஏற்பட்ட காயத்தால் தான் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வடமதுரை போலீசாருக்கு டாக்டர்கள் இதுகுறித்து புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் ஜான்பீட்டரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று துருவி, துருவி விசாரித்தனர். அப்போது அவர் திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் தெரிவித்தார். அதாவது, சம்பவத்தன்று மனைவி பிரிந்து சென்றதற்கு நான் தான் காரணம் என்று கூறி என்னிடம் அருள்ஸ்டாலின் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் அவரை அடித்தேன். மேலும் நான் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் இறந்துவிட்டால் எங்கே நான் மாட்டிக்கொள்வேனோ என்ற பயத்தில் எனது தம்பி விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தேன் என்று போலீசாரிடம் ஜான்பீட்டர் தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இரும்பு கம்பியால் தம்பியை தொழிலாளி அடித்து கொன்றுவிட்டு விபத்து என்று கூறி நாடகமாடிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
Tags:    

Similar News