செய்திகள்
தஞ்சை அருகே அடகு கடையில் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
தஞ்சை அருகே அடகு கடையில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சாலியமங்கலம்:
தஞ்சை அருகே உள்ள சாலியமங்கலம் வெள்ளாள தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 64). இவர், சாலியமங்கலம் ரெயில் நிலைய சாலையில் தங்கம், வெள்ளி அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை மூடிவிட்டு ராஜேந்திரன் தனது வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரோ சில மர்ம நபர்கள், அடகு கடையின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே சென்று அலமாரியை உடைத்து அதில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். மறுநாள் காலை ராஜேந்திரன் கடையை திறக்க வந்தார். அப்போது ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது கடையில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அலமாரி உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜேந்திரன், அம்மாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை போன வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
அடகு கடையின் ஜன்னல் கம்பியை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் சாலியமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.