செய்திகள்
கைது

பிரபல ரவுடி கைது- 25 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2020-09-21 10:41 GMT   |   Update On 2020-09-21 10:41 GMT
குற்றாலத்தில் பதுங்கி இருந்த பிரபல ரவுடியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மதுரை:

மதுரை தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி. அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டி. இவர்களுக்கு இடையே, தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்த முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக இருதரப்பிலும் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.

இந்தநிலையில், காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவரும், ராஜபாண்டி தரப்பை சேர்ந்தவருமான வெள்ளைக்காளி என்பவர் மீது நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் அவரை கஞ்சா வழக்கிலும் தேடி வந்தனர். இதற்கிடையே அவர் திருச்சியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுரை மாநகர் சிறப்பு படை போலீசார், திருச்சி போலீசாருடன் இணைந்து பிரபல ரவுடி வெள்ளைக்காளியை தேடி வந்தனர்.

இதற்கிடையே, அவர் குற்றாலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் குற்றாலம் சென்று, வெள்ளைக்காளி உள்பட 4 பேரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பின்னர் மதுரைக்கு அவர்களை அழைத்து வந்தனர். அப்போது வெள்ளைக்காளி கீழே விழுந்து காயம் அடைந்தார். இதைதொடர்ந்து அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News