சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் ஓ.பன்னீர்செல்வம் உடல் நல பரிசோதனை- 1 மணி நேரத்தில் வீடு திரும்பினார்
சென்னை:
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த மே மாதம் சூளைமேட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இருதயம் பிரச்சினை சம்பந்தமாக அவருக்கு சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டது. ஒரு சில நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் பின்னர் வீடு திரும்பி வழக்கமான பணிகளை மேற்கொண்டார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக திருமழிசை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு கூட்டங்கள் நடத்தினார். சட்டசபை கூட்ட தொடரிலும் முழுமையாக கலந்து கொண்டு முதல் துணை நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு திடீரென சென்றார்.
இந்த ஆஸ்பத்திரியில் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே சிகிக்சை பெற்றவர் என்பதால் அவரது சிகிச்சை விபரங்களை அடிப்படையாக வைத்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ரத்த அழுத்தம்,நீரிழிவு பரிசோதனை உள்பட பல்வேறு உடல் பரிசோதனைகள் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
அதன் பிறகு காலை 8.15 மணி அளவில் ஓ.பன்னீர்செல்வம் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.