செய்திகள்
சாலையோரம் கிடந்த ஆண் குழந்தை: கள்ளக்காதலில் பிறந்ததா? போலீஸ் விசாரணை
பாணாவரம் அருகே பிறந்து சிலமணிநேரமே ஆன ஆண் குழந்தையை துணியில் சுற்றி சாலையோரம் வீசி சென்றுள்ளனர். கள்ளக்காதலில் பிறந்ததால் வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த காட்டுப்பாக்கம் சிவன் கோவில் எதிரே, பிறந்த பிறந்து சிலமணிநேரமே ஆன ஆண் குழந்தையை யாரோ சாலையோரம் வீசி சென்றுள்ளனர். அப்பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது துணியில் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை கிடந்தது.
அதைத்தொடர்ந்து பொதுமக்கள் குழந்தையை மீட்டு பால் கொடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாணாவரம் போலீசார், குழந்தையை மீட்டு மேல்களத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பினர்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கள்ளக்காதலில் பிறந்ததால் ஆண்குழந்தையை சாலையில் வீசிச்சென்றனரா?, குழந்தையை வீசிச்சென்றவர்கள் யார்? என்பது குறித்து பாணாவரம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
பிறந்து சிலமணிநேரமே ஆன ஆண் குழந்தை சாலையில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.