கந்து வட்டி பிரச்சினை- திருச்சி ரெயில்வே ஊழியரை கடத்தி சரமாரி தாக்குதல்
திருச்சி:
திருச்சி கொட்டப்பட்டு ஐஸ்வர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56). இவர் பொன்மலை ரெயில்வே பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு மறைந்த நடிகர் அலெக்சின் மருமகனும், நடிகருமான ஜெரால்டு என்பவரிடம் ரூ.35 ஆயிரம் கடன் வழங்கினார்.
அதற்கு வட்டி கட்டி வந்த நிலையில் கொரோனா பிரச்சினையால் சில மாதமாக பணம் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த சனிக்கிழமை வழக்கம் போல் வேலை முடிந்து பணி மனையில் இருந்து வெளியே வந்த ஆறுமுகத்தை 3 பேர் வழிமறித்து இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றனர்.
பின்னர் தென்னூர் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் வைத்து ஒருநாள் முழுவதும் அவரை கட்டி வைத்து அடித்து உதைத்ததாக தெரிகிறது. பின்னர் ஒருவழியாக அவர்களிடம் கால அவகாசம் கேட்டு ஜெஸ்டின் ஜெபராஜ் தப்பி சென்று பொன்மலை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் திருச்சி பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்த நடிகர் ஜெரால்டு, மரியம் நகரை சேர்ந்த ஜெஸ்டின் ஜெபராஜ் (38)மற்றும் விசு ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ஜெஸ்டின் ஜெபராஜை கைது செய்தனர். தலைமறைவான நடிகர் ஜெரால்டு, விசு ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.