செய்திகள்
அரூரில் தொழிலாளி மர்மமரணம்- போலீசார் விசாரணை
அரூரில் தொழிலாளி மர்மமரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்:
அரூரில் இருந்து மொரப்பூர் செல்லும் சாலையையொட்டி உள்ள காப்புகாடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க நபர் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ஜான்சிராணி அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
அப்போது இறந்து கிடந்தவரின் அருகில் நாட்டுத்துப்பாக்கி ஒன்று கிடந்தது. அவருடைய கால் பகுதி கருப்பாக காணப்பட்டது. விசாரணையில் இறந்தவர் இருளப்பட்டியை சேர்ந்த தொழிலாளி மணி(வயது 28) என தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். அவருடைய உடல் அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டது. மணியின் மர்மசாவு குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.